இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக, ஏப்ரல் 14ம் தேதி வரை சுமார் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அத்தியாவசியமில்லாமல் வெளியில் நடமாடும் நபர்களை போலீசார் கண்டித்தும், எச்சரித்தும், கைது செய்தும் வருகின்றனர். இந்நிலையில், பல்வேறுக் கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய மக்களுக்கு விதித்து வருகின்றன. அந்த வரிசையில், உத்திர்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி, ஊரடங்கு உத்தரவால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் தவிக்கின்றனர். நிறுவனங்கள் தரும் சம்பளத்தினை நம்பியே, அவர்கள் வாழ்க்கையும் பொருளாதாரமும் உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு, அந்த நிறுவனங்கள் அனைத்தும், தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதியத்தினை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் ஏழைத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களை கண்டறிந்து அரசு ஒதுக்கியுள்ள நிதியிலிருந்து 1000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வீட்டின் உரிமையாளர்கள், ஏழைகளிடம் இருந்து வீட்டு வாடகையினை வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. நம் மாநிலத்தில் உள்ள அனைவருக்காகவும், மாநில அரசு வேகமாக செயல்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.